Tuesday, 1 May 2012

மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்


சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது.